திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பங்குனி தேர் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 13ம் தேதி தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்தார். 17ம் தேதி நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து, பங்குனி தேர் அருகில் வையாளி கண்டருளினார். 18ம் தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19ம் தேதி நடந்தது.
திருவிழாவின் 11ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் வீதியுலா வந்தார். இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு கருட மண்டபம் வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு 7 மணிக்கு வாகன மண்டபத்துக்கு வந்தார். அங்கிருந்து இரவு 7.30 மணிக்கு ஆளும்பல்லக்கில் சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணியளவில் வாகன மண்டபம் வந்தடைந்தார். இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஆளும் பல்லக்குடன் பங்குனி தேர் திருவிழா நிறைவு பெற்றது.